பக்கங்கள்

21 மே 2015

வித்தியா கொலையாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும்!

புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான பாலியல் வல்லுறவு, படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்தால் 24 மணித்தியாலத்தில் தண்டனை வழங்கிவிடுவர் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் எனது துக்கத்தை வெளிப்படுத்துகிறேன். மேற்படி மாணவி படுகொலை செய்யப்பட்டு ஏழு தினங்களாகின்றன. இதனால் இன்று வட மாகாணம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, யாழ்ப்பாணத்தின் இயல்புநிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி கடத்தப்பட்ட மறுதினம் அதிகாலை 6 மணியளவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்தபோதும் பொலிஸார் 9 மணிக்கே வருகை தந்தனர். முன்னதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற தாயார் நான்கு மணித்தியாலங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது தேவையற்ற விடயமாகும். அதுமாத்திரமன்றி, குறித்த மாணவி சிநேகிதனுடன் சென்றிருக்கலாம் எனக் கூறியுள்ளதுடன், மறுநாள் வந்து முறையிடுமாறு பொறுப்பின்றிய நிலையில் அசட்டையாகச் செயற்பட்டுள்ளனர். மாணவி மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை ஆகியவற்றுடன் 10 பேருக்கு தொடர்புள்ளது. இதில் வேலணைப் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும் அடங்குகிறார். கடந்த காலங்களிலும் இப்பிரதேசங்களில் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுகள், படுகொலைகள், சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தல் போன்ற குற்றச்செயல்கள் இடம்பெற்றன. அங்கு இயங்கி வருகின்ற ஆயுதக்குழுக்களாலேயே இந்தக் குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறுமிகளை, யுவதிகளை, பெண்களை படுகொலை செய்து கிணறுகளில் போட்டு புதைத்ததும் இந்த ஆயுதக்குழுக்களே ஆகும். இன்று வடக்கில் குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அங்கு இயங்குகின்ற ஆயுதக்குழுவே இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் அசட்டையாக இருக்கின்றனர். மேற்படி ஆயுதக்குழுக்கள் இன்று பலவந்தமாக பொதுமக்களுக்குச் சொந்தமான வீடுகளையும், உடைகளையும் பறித்து அலுவலகங்களை நடத்திவருகின்றன. எனவே, வடக்கில் இருக்கின்ற ஆயுதக்குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக பதவி விலக்கவேண்டும்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.