பக்கங்கள்

04 அக்டோபர் 2020

பிரான்சில் நடந்த கொடூரப் படுகொலை!

பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் நேற்றுக் காலை இலங்கைத் தமிழர்கள் ஐவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தை ஒன்று, நான்கு வயதுக் குழந்தை ஒன்று, 14 வயதுடைய இருவர், பெண் ஒருவர் என 5 பேர் உள்ளடங்கியுள்ளனர். உடல்கள் இப்பொழுது வரை அந்த வீட்டிலேயே உள்ளன. சடலங்களை எடுத்துச்செல்லும் வாகனம் சம்பவ இடத்துக்கு வந்திருக்கிறது. பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில், இரண்டு குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையிலேயே இந்தக் கொலைகள் நடந்துள்ளன. கொலை நடைபெற்ற இடத்திலிருந்து படுகாயமடைந்த நிலையில் தப்பிவந்த சிறுவன் ஒருவன் வீதியில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்கு வந்து உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளான். “எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்” என குறித்த சிறுவன் மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளான். சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். வீடு முழுவதும் இரத்தம் தெறித்து, இரத்த வெள்ளத்தில் ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினார்கள். “சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. தேசிய மற்றும் நகரப் பொலீஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப் பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.