தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பொறுப்பில் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்று கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழரின் இன விடுதலைக்காக அதியுச்ச தியாகங்களை செய்த, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.
இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பல தடவை என்னால் சுட்டிக்காட்டப்பட்டதை தாங்கள் அறிவீர்கள். இந்த விடயம் தொடர்பாக இனிமேல் கதைக்க வேண்டாம் என்றும் என்னால் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் 08.05.2020 அன்று ஒரு சிங்கள ஊடகத்திற்கு இதேபோன்று கருத்து கூறியிருக்கின்றார்.
இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பினும், அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்.
நானும் அவருடைய கருத்தை எதிர்க்கின்றேன். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும்.
அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி அவரிடத்திலிருந்து வேறு நபர்களுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக முடிவெடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை கூட்டும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.