பக்கங்கள்

16 ஜூன் 2019

கஜேந்திரகுமார் இணைந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை-விக்கினேஸ்வரன்!

கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே நாங்களும் விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவிக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். 'எனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் முரண்பாடு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவர் இல்லாதது தம்பி கஜனுக்கு ஆறுதல் தான். கட்டாயம் நான் கூறுவதை ஏற்குமாறு கஜனை வற்புறுத்தி இருப்பார் தர்மராஜா அவர்கள்! காரணம் இன்றைய நிலை அப்படி என்பதை நண்பர் தர்மராஜா நன்றாக அறிந்திருந்தவர். வடகிழக்கை துண்டாட, படையினரை நிரந்தரமாக வட கிழக்கில் வைத்திருக்க, தமிழ் பேசும் மக்களை பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கத் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் யாவுமே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளதை அவர் அறிந்திருந்தார். கடந்த 30 வருடகால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் வடகிழக்கில் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாங்கள் இன்று இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வருவதை நன்கறிநதிருந்தார். காணிகள் பற்றிய சட்ட அறிவைக் கொண்டிருந்த அவர் நிலம் போனால் எமது அடிப்படை நிலையே போய்விடும் என்பதைப் பலதடவைகள் கூறியும் வந்துள்ளார். நிலைமை கட்டுமீறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை தமது அந்திமகாலத்தில் கூறி அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர் நண்பர் தர்மராஜா அவர்கள். பலமுள்ள கொள்கைப் பற்றுள்ள தமிழ்த் தலைவர்கள் சேர வேண்டியதன் அவசியத்தை அவர் அறிந்திருந்த காரணத்தால் எனக்கு சார்பாக தம்பி கஜனிடம் சிபார்சு செய்திருப்பார் என்று கூறுகின்றேன். கொள்கைப் பற்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் சேர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நண்பர் தர்மராஜா அறிந்திருந்ததால் கஜனிடமும், கஜனின் தாயாரிடமும், அவர் கட்சி அங்கத்தவர்களிடமும் பேசி நிலைமையை புரிய வைக்கக் கூடிய ஒருவராகவே அவர் இருந்தார். கீரியும் பாம்புமாக இருந்த தமிழ்த் தலைவர்கள் முன்னர் தமிழ் மக்கள் நலம் கருதி ஒன்று சேர்த்ததை அவர் மறந்திருக்கவில்லை. அவரின் மறைவு என்னைப் பலம் இழக்கச் செய்து விட்டது என்று கூறலாம். கஜேந்திரகுமார் மீது அவருக்கு அலாதியான பாசமும் மரியாதையும் இருந்தது. ‘இந்தப் பிள்ளை நல்லதொரு சட்டவல்லுநர் வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளது. அவருக்கு என்னதான் இல்லை? ஏன் தான் கட்சி அரசியலுக்குள் சென்று சீரழிகின்றாரோ தெரியவில்லை’ என்று கூறுவார். கஜேந்திரகுமார் தனது தந்தை போல் பாட்டனார் போல சட்டத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கஜனின் அரசியல் பிடிவாதம் அவருக்கு ஆத்திரத்தை ஊட்டவில்லை. பாசத்தையே கூட்டியது. தொடர்ந்து கஜேந்திரகுமார் அரசியலில் நன்றாகச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நாங்களும் கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து.” என்று கூறினார். இந்த நிகழ்வில் கஜேந்திரகுமாரும் பங்கேற்றிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.