பக்கங்கள்

02 டிசம்பர் 2018

புலிகளின் புலனாய்வுப் பிரிவே பொலிஸாரின் கொலைக்கு காரணமாம்!


மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை மட்டக்களப்பில் நடத்த விடாது தடுப்பதில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்ததாகவும் எனவே அவர்களைப் பழிவாங்கவே விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸார் இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும் பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர் என பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. இக் கொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்காக மட்டக்களப்புக்கு சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, குறித்த நிகழ்வை நடத்துவதில் சிக்கல் தன்மை நிலவியமையினால், குறித்த இரண்டு பொலிஸ் அலுவலர்களும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸ்தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. 48 வயதுடைய குறித்த நபரை சந்தேகத்துக்குரியவர் என கிளிநொச்சி வட்டக்கச்சி - ஹட்சன் வீதியில் வைத்து நேற்றைய தினம் சிறீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.