பக்கங்கள்

12 ஜூன் 2018

பாவப்பட்ட பணத்தை தவராசாவின் வீட்டின் முன் எறிந்த மாணவர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில்,கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை, அவரது வீட்டின் முன்னால் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். கடந்த மே மாதம் 18 ஆம் திகதி,முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாண சபையினால் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வுக்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500 ரூபாய் பணம் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, தம்மிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு கடந்த மாகாணசபை அமர்வில் கேட்டிருந்தார். ஆனாலும் அந்த பணத்தையும் சேர்த்தே, நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தவராசாவுக்கு வழங்குவதற்காக ஒரு ரூபாய் வீதம் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு இன்று காலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் வடமாகாணசபைக்கு வந்திருந்தனர்.எனினும் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதன் பின்னர் முதலமைச்சரிடம் அந்த பணத்தை வழங்க மாணவர்கள் முயன்றபோது, அவைத்தலைவருடன் பேசிவிட்டு மீண்டும் மாணவர்களுடன் பேசிய முதலமைச்சர், மேற்படி விடயம் தொடர்பாக கடந்த அமர்வில் பேசிவிட்டோம் ஆகவே இந்த பணத்தை பெற்றுக்கொள்ளமாட்டோம்.ஆகவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேசுங்கள் என முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் அப்பணத்தை பொட்டலமாக கட்டிய மாணவர்கள் ‘பாவப்பட்ட பணம்’ என எழுதி எதிர்க்கட்சி தலைவர் தவராசாவின் வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இல்லாத நிலையில், பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு முன்னால் எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் இன்றைய மாகாணசபை அமர்விலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.