பக்கங்கள்

13 நவம்பர் 2017

மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர் மட்டுமே பிரதான சுடர் ஏற்ற வேண்டும்!


இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று  மாவீரர்களது குடும்பங்கள் சார்பில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர்களது குடும்பங்கள் சார்பில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்- “ எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. தற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழுச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.இந்த நிகழ்வானது – எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியில் வந்தோமோ அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகின்றோம். குறிப்பாக – இதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில் – மாவீரர் நிகழ்வுச் சூழலில் வைத்து அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

1. பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.

 2. சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.

 3. பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக – லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.

 4. தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை – ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது. அத்தோடு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது. இதேவேளை மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம். நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.