பக்கங்கள்

03 ஆகஸ்ட் 2016

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்!

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், அவரின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாய ராஜபக்‌ஷவும் போர்க்குற்றவாளிகள். இறுதிப் போரில் அரச படைகள் குறிவைத்து ஏவிய கொத்துக்குண்டுகளினாலும், ஏனைய வெடிகுண்டுகளினாலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் செத்துமடிவதற்கு இவர்கள் இருவருமே முக்கிய காரணமானவர்கள். இவர்களுக்குத் தண்டனை வழங்க சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும். இவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் நாட்டில் இனவாதம் ஒழிந்து உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.'' - இவ்வாறு மீண்டும் ஆணித்தரமாகத் தெரிவித்தனர் வடக்கு மாகாண மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எவ்வாறு அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்கச் செயலணியால் வடக்கு மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: - "இறுதிக்கட்டப் போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? இது தொடர்பில் முழுமையான நம்பகமான விசாரணை நடத்தப்படவேண்டும். இதுவரையில் அவ்வாறான ஒரு விசாரணை நடக்கவில்லை. காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணை பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படவேண்டும். இதில் சர்வதேச பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவேண்டும். அதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் வடபகுதியில் அமைக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் சர்வதேச விசாரணை மூலம் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தத் தண்டனை வழங்கப்படுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும். எமக்கும் பாதுகாப்பு இருக்கும். உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளில் நாம் நம்பிக்கை வைக்க முடியாது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணைக் குழுவே அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உருவாகும். நாங்கள் சலுகைகளையோ, சன்மானங்களையோ எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். அதற்காகத்தான் எல்லா இடங்களுக்கும் அலைகின்றோம். நாங்கள் கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவற்றைச் செயற்படுத்தவேண்டும்'' இவ்வாறு மக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.