பக்கங்கள்

15 ஆகஸ்ட் 2016

சிங்களத்திற்கு பணிந்து தமிழீழம் என்ற சொல்லை அவுஸ்திரேலியா நீக்கியதாம்!

அவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, இலங்கை தூதரகத்தின் அழுத்தத்தின் பேரில் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிறந்த நாடு என்ற கேள்விக்கான பதில்களில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அதில் தமிழீழமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனால் அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழீழம் என்று தமது பிறந்த இடத்தை குறிப்பிடத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த 6ஆம் ,7ஆம் நாள்களில், கன்பராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு பெருமளவு தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல்களும் வரத் தொடங்கின. வாரஇறுதி விடுமுறைக்குப் பின்னர், முதலாவது வேலை நாளான கடந்த 9ஆம் நாள், கன்பராவில் உள்ள இலங்கைத் தூதரகம் துரித நடவடிக்கையில் இறங்கியது. அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்திடமும், அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடமும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவுஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஸ்கந்தகுமார் அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவுடன் நேரடியாகப் பேசினார். விடுதலைப் புலிகள் அமைப்பு அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழீழம் என்ற தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்று அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடம் அவர்கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழம் என்ற பதம், அவுஸ்ரேலிய அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இடம்பெற்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தமிழீழத்தை நீக்குவதாக கடந்த 9ஆம் திகதி இலங்கை தூதுவருக்கு உறுதி அளித்தது, இதற்கமைய அன்று பிற்பகல் 2.30 மணியளவில், தமிழீழம் நீக்கப்பட்டது.இவ்வாறு செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.