
'வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை விரைவில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். இதுவே எமது நிலைப்பாடும்' என வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சிரேஷ்ட அமைச்சரும் சமசமாஜக் கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண ஆதரவு தெரிவித்துள்ளார்.
'தமிழர்களின் விருப்பத்தைப் போன்றே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் விரைவில் அமுல்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்வர வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.
வடமாகாண சபையில் இராணுவ ஆளுநரை உடனடியாக பதிவியிலிருந்து நீக்கி அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
'வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு சமசமாஜக் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் உரிமையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கே இருக்கின்றது.
அவர் தான் வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து இராணுவ ஆளுநரைப் பதிவியிலிருந்து நீக்கி சிவில் ஆளுநரை நியமிக்க முன்வர வேண்டும். வடக்கைப் பொறுத்த மட்டில் சிவில் ஆளுநர் ஒருவரே சிறந்தவராவார். அப்போதுதான் அங்குள்ள வர்களின் சுதந்திரமும் நிம்மதியும் பூரணமாக்கப்படும். இதை ஜனாதிபதி புரிந்து செயற்பட வேண்டும். ஆகவே மிக விரைவில் வடக்கில் சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.