
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளர்.
அண்மையில் கொழும்பில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் சம்பந்தன் ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகவிலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த இரா.சம்பந்தன்,
“அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேசியிருந்தேன். நான் அவர்களை சந்தித்து பேசியிருந்தது உண்மை. இந்த சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து பேசியிருந்தோம்.
தனது அரசாங்க காலத்தில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை வழங்க விரும்பியதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.அந்த காரியங்களை செய்ய முடியாமல் போனமைக்கு பல காரணங்களையும் கூறியிருந்தார். இந்நிலையில், பழைய விடயங்களை மறந்து விடுமாறு நான் அவரிடம் கோரினேன்.
தற்போது புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றது. அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரினதும் அவசியம். உங்களுடைய ஆதரவு மிகவும் முக்கியம். அதனை நீங்கள் வழங்க வேண்டும் என அவரிடம் கோரினேன்.
நாடு தற்போது அடைந்திருக்கும் நிலையிலிருந்து மீட்கப்பட வேண்டுமாக இருந்தால் அது அத்தியாவசியமான ஒன்று. அந்த விடயத்தில் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். தான் அதைப்பற்றி சிந்திப்பதாக சொல்லியிருந்தார். மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நாங்கள் யாருடைய பகைமையையும் சம்பாதிக்க விரும்பவில்லை” என இரா. சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.