
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது.
இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்தார். அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. விஜித ஹேரத், அதனை வழிமொழிந்தார்.
நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி, வாக்கெடுப்பை நடத்துவதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் 10:27 மணியளவில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைத்தார்.